ராமச்சந்திரன் நாயர் எழுபதுகளில் கேரளாவில் போலீஸ்காரராக பணியாற்றியவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தான் நிகழ்த்திய மோதல் கொலை குறித்து,
அவர் அளித்த வாக்குமூலம்தான் இந்நூல்.
ராமச்சந்திரன் நாயர் சி.ஆர்.பியில் காவலராக பணியாற்றிய காலம்.
கேரள நக்சல் இயக்கத்தின் வீரம்மிக்க இளம் தோழர் வர்கீஸ். நக்சல் இயக்கத்தின் தோழமை சக்தி ஒருவரால் அவர் தங்கியிருக்கும் இடம் போலீசுக்கு காட்டிக் கொடுக்கப்படுகிறது.
நாயர் டீம் வர்கீஸை கைது செய்து அழைத்துச் செல்கிறது. ‘என்னை எப்படி இருந்தாலும் உங்களில் ஒருவர்தான் சுடப்போகிறீர்கள். அதற்குமுன் சில முழக்கங்களை இட நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்!’ என்கிறார்.
நாயரும் வர்கீஸின் வயதொத்த இளைஞர். ‘உன்னை நாங்கள் ஏன் கொல்லப் போகிறோம்? நீதி மன்றத்தில் ஒப்படைப்போம். அங்கு என்ன தண்டனை தருகிறார்களோ, அதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்!’ என்கிறார் அப்பாவி காவலாரன நாயர்.
உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு வருகிறார்கள். வர்கீஸ் கண்ணைக் கட்டி ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
உணவு வருகிறது. வர்கீஸை விட்டுவிட்டு சாப்பிடப் பிடிக்கவில்லை நாயருக்கு. கண் கட்டப்பட்ட நிலையில்,( உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல்) வர்கீஸுக்கு உணவை ஊட்டிவிடுகிறார் நாயர். வர்கீசின் உதட்டில் பீடியைப் பொறுத்தி புகைக்கவும் உதவுகிறார்.
உணவு முடிந்த பிறகு உயர் அதிகாரி நாயர் டீமிடம் , ‘ உங்களில் யார் வர்கீஸை சுடத் தயாராக இருக்கிறீர்கள்?’ கேட்கிறார். அனைவரும் கையுயர்த்துகிறார்கள். ராமச்சந்திரன் நாயர் தவிர்த்து. ‘நீ சுடமாட்டாயா? ஏன்? ‘ உயர் அதிகாரி நாயரிடம் கேட்கிறார். ‘சார், கைது செய்யும்போது அவன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நமக்கு ஒத்துழைத்தான். அவனை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுதானே முறை!’ என்கிறார்.
‘நக்சல்லோடு நடந்த மோதலில், ஒரு போலீஸ்காரரும் மரணமடைந்தார்! செய்தி வரும் பரவாயில்லையா?’ உயர் அதிகாரி சொல்ல மௌனமாகிறார் நாயர்.
அவர் கையில் துப்பாக்கி திணிக்கப்படுகிறது.
‘டுமீர்’ ரவைச் சத்தம்
காட்டில் எதிரொலிக்கிறது.
‘மாவோ ஐக்கியம் சிந்தாபாத்;
புரட்சி வெல்லட்டும்.’
முழங்கி வீழ்கிறார் வர்கீஸ்.









Be the first to review “நான் நிகழ்த்திய் மோதல் கொலை/Naan Nigalthiya Mothal Kolai”